தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ஓபிஎஸ்!

tamilnadu-politics
By Nandhini May 30, 2021 10:30 AM GMT
Report

கொரோனா பாதிப்பால் தாய், தந்தையை இழந்து அனாதையாக நிர்கதியாய் குழந்தைகள் நிற்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்றும், அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி, விடுதிச் செலவை அரசே ஏற்கும் என்றும், குழந்தைகளின் பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.மேலும், ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது எனவும் உருக்கமாக கூறினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது -

கொரோனா தொற்று காரணமாகப் பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக முதல்வரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட தமிழக முதல்வருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.