ஆன்லைன் வகுப்பில் முறையற்ற வகையில் ஆசிரியர்கள் நடந்து கொண்டால் ‘போக்சோ’ சட்டம் பாயும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
ஆன்லைன் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு (ரெக்கார்டு) செய்யப்பட வேண்டும்.
இந்த பதிவு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.
அந்த குழு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும், ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியர் தங்கள் புகார்களை தெரிவிக்க ஹெல்ப் லைன் எண் உருவாக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.