என்னை நீக்கியது போல் எடப்பாடியை கட்சியை விட்டு நீக்குவார்களா? நிலோபர் கபில்!
என்னை நீக்கியது போல் எடப்பாடியாரையும் கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் ஆவேசமாக பேசியுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணிக்கும், நிலோபர் கபிலுக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதனால்தான் நடந்து முடிந்த தேர்தலில் நிலோபர் கபிலுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை என்று நிலோபரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது, அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நிலோபர் கபில் நீக்கப்படுவதாக கடந்த 21ம் தேதி அன்று அதிமுக தலைமை அறிவித்தது.
நிலோபரின் தனி செயலாளர் பிரகாசம், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் பேரில்தான் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
அரசு வேலை வாங்கித்தருவதாக 106 பேரிடம் 6 கோடி ரூபாய் மோசடி நிலோபர் செய்துள்ளதாக பிரகாஷ் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் நிலோபர் பேசியதாவது -
நான் அமைச்சராக இருந்தவரைக்கும் எனக்கு கட்சியில் மரியாதை எதுவும் கிடையாது. என்னுடைய தொகுதி கட்சியினர் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. அதனால்தான் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
2016ம் ஆண்டு தேர்தலில் எனது வெற்றிக்கு பிரகாஷ் மிகவும் பக்க பலமாக இருந்தார். அதனால் அவரை அரசியல் உதவியாளராக வைத்துக்கொண்டேன். ஆனால், வேலை வாங்கித்தருவதாக அவர் பணம் வாங்கியது எல்லாம் எனக்கு தெரியாது.

என் மீது அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ரூ. 6 கோடிக்காக என் பெயரை நான் கெடுத்துக்கொள்வேனா? என் மீதான புகாரை நான் சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பிரகாஷ் கூறியபோதுதான் இத்தனை பேர் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள் என்ற விஷயம் தெரியவந்தது. ஏப்ரல் மாதம் இது குறித்து எஸ்.பி. அலுவலகத்தில் பிரகாஷ் மீது புகார் கொடுத்தேன்.
வேலை வாங்கித்தருவதாக யாரிடமாவது பணம் வாங்கி இருந்தால் அதற்கு பிரகாஷ்தான் பொறுப்பு. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. வேண்டுமென்றால் என் வங்கிக்கணக்கினை தணிக்கை செய்து கொள்ளுங்கள். ஊழல் புகாரினால் என்னை நீக்கியதாக சொல்கிறார்கள்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவர்களையும் கட்சியை விட்டு நீக்க வேண்டியததானே? முன்னாள் முதல்வர் மீது இந்நாள் முதல்வர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதற்காக அவர் கட்சி்யை விட்டு விலகிவிடுவாரா? இல்லை, நீக்கி விடுவார்களா?
இவ்வாறு அவர் பேசினார்.