13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்து
13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பகுதில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 முக்கிய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. நாளை இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது.
13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில் காவல் வாகனம் விபத்துக்குள்ளானதில் போலீசார் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.