இந்தியாவின் அமைதி பூங்காவாக தமிழகம் விளங்கி வருகிறது - முதல்வர் பழனிசாமி
இந்தியாவின் அமைதி பூங்காவாக தமிழகம் விளங்கி வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை, ராயபுரம் கல்மண்டபம் சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்தும் திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, "வெற்றி நடை போடும் தமிழகம் என்பதை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. இதை சொன்னாலே ஸ்டாலின் அலறுகிறார். திமுகவின் ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்துக்கு தான் வளர்ச்சி கொடுத்து கொண்டார்கள். தமிழகத்தை வீழ்ச்சியடையவே அவர்கள் செய்தார்கள்.
நான் எதை நினைத்தாலும் அஞ்சாமல் சாதிப்பேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். மேலும் தற்போது தமிழகம் தான் இந்தியாவின் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருவதும் நிதர்சனமான உண்மை.
தமிழகத்தின் குற்றங்களை கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விடுகின்றனர்."