அமெரிக்கா, ஹாங்காங், சீனா நாடுகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் சென்னைக்கு வந்தன
அமெரிக்கா, ஹாங்காங், சீனா நாடுகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் 3 சரக்கு விமானங்களில் சென்னைக்கு வந்து சேர்ந்தன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து, நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, முதலமைச்சா் ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழக அரசு ஆக்ஜிசன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆக்ஜிசன் கொண்டு வருவதிலும் போா்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதோடு, வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் பெருமளவு தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மத்திய அரசும் அதற்கு தாராளமாக அனுமதியளித்துள்ளது.
இதனையடுத்து, மருத்துவமனைகள், தனியாா் அமைப்புகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை அதிகாக இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. நேற்று இரவு அமெரிக்கா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து சென்னை வந்த 3 சரக்கு விமானங்களில் ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கின.
சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த கருவிகள் அடங்கிய பாா்சல்களுக்கு முன்னுரிமை வழங்கி, உடனடியாக சுங்கச் சோதனைகள் முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா். சென்னைக்கு நேற்றிரவு மட்டும் அமெரிக்கா, ஹாங்காங், சீனாவிலிருந்து 52 ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள் வந்துள்ளன. அடுத்த சில நாட்களில் மேலும் பல கருவிகள் வெளிநாடுகளிலிருந்து வரவிருப்பதாக கூறப்படுகிறது.