ஒமைக்ரான் வைரஸ் தடுக்க - தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமலை தடுக்க, சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகின்றது. இதனையடுத்து, தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவிய 38 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இவர்களின் உடல்நிலையை அறிந்துகொள்ள, குறைந்த நேரத்தில் முடிவு கிடைக்கக்கூடிய ரேபிட் பரிசோதனை கட்டணம் ரூ.4000 லிருந்து ரூ.3400 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்ககான கட்டணமும் ரூ.900 லிருந்து ரூ.700 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் முடிவு கிடைக்க 6 மணி நேரம் ஆவதாக தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.