மாநராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது - ஆணையர் ககன் தீப் சிங் பதவி பிரமாணம் செய்கிறார்
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,601 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 60 சதவீதம் வாக்குப்பதிவே பதிவாகியிருந்தது.
இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி, சென்னை உள்பட 21 மாநகராட்சிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.
அதேபோல், 132 நகராட்சிகளிலும், 435 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றியடைந்தது.
வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு விழா இன்று அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற 1,369 உறுப்பினர்களுக்கு அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள்.
வார்டு வாரியாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் மாநகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
இதே போல நகராட்சிகளில் வெற்றி பெற்ற 3,824 உறுப்பினர்களுக்கு அந்தந்த நகராட்சி கமிஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள்.
பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 7,408 உறுப்பினர்கள் செயல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாமன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.