எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்ன குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவியை வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மேலும், பிரசன்னா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
வண்டலூர் வயர்லஸ் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த T. பிரசன்னா (வயது-26) 18.10.2021 அன்று இரவு 8.00 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமையிடத்தில் இருந்து காமராஜர் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் T.பிரசன்னா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.