கொரோனா பரவல் எதிரொலி; தமிழக-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

COVID-19
By Thahir Apr 24, 2022 10:19 PM GMT
Report

வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிருமிநாசினி பயன்படுத்துவதை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கேரளாவிலும் தொற்று பரவல் இருப்பதால், கேரளாவில் இருந்து வரும் பொதுமக்களை சோதனை நடத்தவும், தடுப்பூசி போட்ட வர்களை மட்டும் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் கூறியதாவது:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் படி எல்லைப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தீவிரமாக தொடங்கும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று உரிய அறிவுரைகளை பிறப்பிக்க உள்ளார். அதன்படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோவை மாவட்டத் தில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. எனவே மருத்துவ பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.