2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு - அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ஆறுமுகசாமி ஆணையம், தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கிறது.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் கடந்த 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் நாள் அவர் உயிரிழந்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக பலர் தங்கள் கருத்துகளை கூறி வந்தனர்.
இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுவரைக்கும் இந்த வழக்கு தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த விசாரணையின் போது, எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அந்த மருத்துவர் கொடுத்த வாக்குமூலத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைசுற்றல், மயக்கம், துணையின்றி நடக்க முடியாத அளவிற்கு அவருக்கு பிரச்சினை இருந்ததாகவும், தனக்கு ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக பேசினார் என்றும், மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அவர் ஓய்வெடுக்க மறுத்தார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது, 2 ஆண்டுகள் கழித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடங்கி உள்ளது. விரைவில் இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.