தமிழகத்தில் இந்தி படிப்பதை யாரும் படிக்க வேண்டாம் என்று தடுக்கவில்லை – தமிழக அரசு
இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்திலிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், மாணவர்கள் ஒருமொழியை கூடுதலாக தெரிந்துகொள்வது நல்ல விஷயம்தான். தமிழகத்தை தவிர, வேறு 2 மாநிலங்கள் இந்த கொள்கையை அமல்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.
அதேபோல், இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்திலிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் அரசு அமல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் இந்தியை கற்றுக் கொள்ள யாருக்கும் தடை விதிக்கவில்லை. அதேசமயம், இருமொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தான் தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, விரிவான பதில் மனுவை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, இந்த வழக்கை நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளார்கள்.