நாளை தொடங்குகிறது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், முக்கிய பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தன. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை தவிர மற்ற வகுப்பினருக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு அது பின்பற்றப்பட்டது.
இதனிடையே சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ள நிலையில் தேர்வுகளும் நெருங்கியுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை ( மே 5) தொடங்குகிறது.
இந்த தேர்வு மே 28 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இதற்கான ஹால் டிக்கெட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றித் தேர்வு நடைபெறும் என்ற போதிலும், மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு எழுதும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைத் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்றும், மீறி செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்தார்.
பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், தேர்வை ரத்து செய்து அடுத்த ஓராண்டுக்குத் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், குறிப்பிட்ட நபருக்குத் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத் தேர்வு மையங்களில் உள்ள வினாத்தாள் மையங்களை ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள் என்றும், மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.