திருவள்ளூரில் ஒரு வாக்கு குறைவதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
திருவள்ளூரில் ஒரு வாக்கு குறைவதால் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது 2 கட்டங்களாக அக்.6-ம் தேதி மற்றும் 2ம் கட்ட தேர்தல் அக்.9-ம் தேதி நடந்தது. இதனையடுத்து, இன்று உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
அதைப்போல் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்காக, 74 வாக்கு எண்ணும் மையங்களில் 31,245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. தேர்தலில் 460 வாக்குகள் பதிவான நிலையில் 459 வாக்குகள் மட்டுமே இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.