கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்தது. அதில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்கள் இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்த போது பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்ததில், தலைமைக் காவலர் சரவணன் என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இரவு நேர ரோந்து பணியின்போது பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், காவலர் சரவணனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதைப்போல, எலும்பு முறிந்து பலத்த காயமடைந்த மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.