அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா. உடல் நல்லடக்கம் செய்யப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் புதுச்சேரி, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. கரிசல் மண் சார்ந்த இவரின் எழுத்துக்களால் கி.ரா. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் – வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! என்று பதிவிட்டுள்ளார்.