பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம், 12ம் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தன. ஏற்கனவே 2020ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வுகளை தவிர மற்ற வகுப்பினருக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு அது பின்பற்றப்பட்டது.
இதனிடையே சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ள நிலையில் தேர்வுகளும் நெருங்கியுள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (மே 5) தொடங்குகிறது. அதேபோல, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மே 6) தொடங்க உள்ளன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம், 12ம் மாணவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! என்று பதிவிட்டுள்ளார்.