கள்ளக்குறிச்சி பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. இந்தக் கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கடையில் வேலை பார்த்து வந்த 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் பிடித்த தீ அருகில் இருந்த பேக்கரியிலும் பரவியது.
இதனால் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறி, பெருமளவு தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் தீ விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 5 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.