தமிழக அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

By Fathima Oct 27, 2021 09:33 AM GMT
Report

அரசுப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.10.2021) விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தில் உள்ள திரு.பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சரிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெர்னாஸ் ஜான் அவர்கள், இப்பள்ளியில் மொத்தம் 488 மாணாக்கர்கள் படித்து வருவதாகவும், தற்போது 9 முதல் 12-ஆம் வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும், மாணாக்கர்கள் வருகை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், வகுப்பு அறைகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களிடம் உரையாடினார், கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, ஆசிரியர்கள், மாணாக்கர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர், பள்ளியின் அனைத்து வகுப்பு அறைகள், ஆய்வகம், உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டதோடு, மாணாக்கர்களுக்கு தினசரி உணவு வழங்கும் பட்டியலில் உள்ளவாறு மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.