'இந்தியா வெல்லும்' - உலகக் கோப்பை டிராபியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உலகக் கோப்பை 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கான உலகக் கோப்பையை பல்வேறு நாடுகளில் பயணித்து பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட வருகிறது. அந்தவகையில் உலகக்கோப்பையானது நேற்று இலங்கையிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அரங்கில் உலகக்கோப்பைக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ, உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, உதவி தலைவர் ஆடம் சேட், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோப்பையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மு.க.ஸ்டாலின்
கோப்பையானது இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வைக்கப்பட்டு, நாளை பெங்களூர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பையுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் "இந்தியா வெல்லும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.