நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மீண்டும் பாஜகவிடம் ஏமாந்து விடக்கூடாது - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மீண்டும் பாஜகவிடம் ஏமாந்து விடக்கூடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஸ்பீக்கிங் பார் இந்தியா
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக கடந்த 31ம் தேதி ஆடியோ பதிவொன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ சீரிஸுக்கு 'ஸ்பீக்கிங் பார் இந்தியா' (Speaking for India) என்று ஸ்டாலின் தலைப்பு வைத்திருந்தார்.
அதன்படி கடந்த செப்டெம்பர் 4ம் தேதி சீரிஸின் முதல் ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இரண்டாம் பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது "இந்தியாவிற்காக பேசுவோம் என்று தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் திமுகவின் சாதனைகளை தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட உடன் சமூக வலைத்தளங்களில் வந்த பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு தாய்மார் கேட்கிற மாதிரியான பதிவு அது. அதில் "எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு.. உங்க பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு? என்ற அந்த பதிவு தமிழ்நாட்டில் வைரலாகிருச்சு.
பாஜகவிடம் ஏமாந்து விடக்கூடாது
நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மீண்டும் பாஜகவிடம் ஏமாந்து விடக்கூடாது என்றுதான் இந்த பாட்காஸ்ட் சீரிஸ் தொடங்கியுள்ளேன். 2014ஆம் ஆண்டு ஏமாந்தது போல, 2019ஆம் ஆண்டு ஏமாந்தது போல 2024ஆம் ஆண்டும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அங்கு தேனாறும், பாலாறும் ஓடுவது போல பொய் செய்திகளை பரப்பி மக்களை ஏமாற்றி பாஜக ஆட்சி வந்தது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள் நாட்டை வளர்ச்சி அடைய வைக்கிறோம் என்று சொன்னார் மோடி. அவருக்கு கூடுதலாக அடுத்த 60 மாதங்களும் மக்கள் கொடுத்து விட்டனர். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டாரா என்று மோடி பதில் சொல்ல வேண்டும். எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட முடியுமா? 5 டி தான் எனக்கு முக்கியம் என்று மோடி சொன்னார்.
திறமை, வர்த்தகம், பாரம்பரியம், டூரிசம், டெக்னாலஜிதான் முக்கியம் என்றார். இதில் ஒன்றாவது நிறைவேற்றியுள்ளாரா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், என்னை பொருத்தவரைக்கும் பாஜக ஆட்சி 5 C கொண்டதாகத்தான் உள்ளது. கம்யூனலிசம், கரப்சன், கார்ப்பரேட் கேப்டலிசம், சீட்டிங், கேரக்டர் அசாசினேசன் ஆகிய 5 C க்கள் கொண்ட ஆட்சியாக பாஜக உள்ளதாக' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.