ராஜேந்திர பாலாஜி எங்கே? செல்போன்கள் வைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் - அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் சுமார் ரூ. 3 கோடி மேல் பணமோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்விவகாரத்தில் அவரது கூட்டாளிகளான என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, அவர் சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை காலம் என்பதால் இந்த மேல்முறையீடு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரியும், அவரது சார்பில் கோரிக்கை மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க தனிப்படை முயன்று வருகிறது.
ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பிலிருந்த 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜேந்திர பாலாஜியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.