விரைவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 ரொக்கம் - தீவிர ஆலோசனையில் தமிழக அரசு?
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வரும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், ரொக்கத்தொகை அறிவிக்கப்படாதது தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்து வந்தது.
தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது.
பொங்கல் தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கி இருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பியிருந்த, பொது மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது.
மக்களின் இந்த குறையை போக்க ரூ.5,000 ரொக்கம் வழங்கலாம் என்று முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால், மிகப்பெரிய வெற்றியை அடைய இது அஸ்திரமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் திமுகவினர்.
எனவே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5,000 எவ்வாறு வழங்குவது என்று கோட்டை வட்டாரங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.