குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்...! வெளியான தகவல்
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு
கடந்த மாதம் 26-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சி வேங்கை வயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக, வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்லவிடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார். விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்திருக்கிறார்.