அரசுத்துறைகள் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றன - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu
By Nandhini Nov 08, 2021 10:04 AM GMT
Report

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தேங்கி, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. இதனால், சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சென்னைக்கு வர வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மழை நீரை வெளியேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் மழை பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீரில் இறங்கி ஆய்வு செய்த பிறகு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு விநியோகிக்கவும் ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து, இன்று 2ம் நாளாக மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில், அரசு துறைகள் கவனத்துடன் செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இராயபுரம், துறைமுகம், பெரம்பூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை வெள்ள ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தேன்; நிவாரண உதவிகளை வழங்கினேன். அரசுத்துறைகள் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.