தொண்டர்களையும், கழகத்தையும், அம்மாவும், தலைவரும் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் - சசிகலா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களிலும் சசிகலா மரியாதை செலுத்தினார். சசிகலா வருகையையொட்டி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 2 வருடம் சிறை சென்ற சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். பின்னர் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார்.
இச்செயல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் சசிகலா ஈடுபடுவார் என எதிர்பார்த்திருந்த அவரின் ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கும் சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மலர்தூவி மரியாதை செலுத்திய போது திடீரென கண் கலங்கினார். சசிகலா வருகையால் மெரினாவில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசியதாவது -
என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்; இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான், என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவின் முன் இறக்கி வைத்துவிட்டேன். நடந்த விஷயங்களை எல்லாம் ஜெயலலிதாவிடம் கூறினேன்; நல்ல எதிர்காலம் உள்ளது என்பதையும் சொல்லி விட்டு தான் வந்தேன்.தொண்டர்களையும், கழகத்தையும், அம்மாவும், தலைவரும் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன்"
இவ்வாறு அவர் பேசினார்.