உள்ளாட்சி தேர்தலுக்கு க்ரீன் சிக்னல்- சுயேட்சையாக களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?
9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.9ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கு நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் நேற்று சந்தித்து பேசினார். இதில், தேர்தல் நடைபெறும் 9 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது, 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், ஏற்கெனவே நடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களின் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டிருக்கிறார்கள். அதில், வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த முறையும் போட்டியிட இருக்கின்றனர் என்று கூறினர்.
விரைவில் தளபதி விஜய் அரசியல் பிரவேசம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் இதுபோன்று தேர்தல்களில் போட்டியிடுவது, முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.