“இனி பள்ளி பைகளில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்க கூடாது” – ஐகோர்ட் அதிரடி!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்கள், புத்தக பைகளை கைவிடும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அந்த மனுவில், தற்போது இருப்பில் உள்ள நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களில் உள்ள முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வழங்கலாம் எனவும், அதை விடுத்து இருப்பில் உள்ள நோட்டுகள், பைகளை விநியோகிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பொதுமக்கள் வரிப் பணத்தை வீணடிக்கப்படுவதாகவும், மாறாக அவற்றை மாணவர்ளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முன்னாள் முதல்வர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுது பொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது எனவும், அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். பள்ளி புத்தக பைகளில் படத்தை அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதை நீதிபதிகள் பதிவு செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தகபைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அரசு நிதி விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி புத்தக பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.