ஓபிஎஸ் மனைவியை சந்தித்த ஜெயலலிதா - உதவியாளரின் நினைவலைகள்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
உடல்நலக்குறைவால் பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை அவர் காலமானார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், விஜயலட்சுமியின் மறைவு குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘பணிவின் மனசாட்சி மீளா துயில் கொண்டது!’, ‘ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்’ என்ற இலக்கணத் தாயின் மறைவு பெரும் துயரத்தை தந்திருக்கிறது. தந்தைக்கும், தம்பிகளுக்கும் இதை தாங்கி கொள்கிற சக்தியை கொடு இறைவா என்று அவர் வேண்டிக்கொண்டிருக்கிறார்.
மேலும், அவர், வி ஜெய லட்சுமி இருவரும் நம்மை விட்டு மறைந்தனர் என்று இரண்டு ‘ஜெ’க்களும் மறைந்ததை குறிப்பிட்டு சொல்லிவிட்டு, அன்று விஜயலட்சுமி அம்மாவை நம் அம்மா நலம் விசாரித்த காட்சி என்று குறிப்பிட்டு, விஜயலட்சுமி இதற்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா நேரில் வந்து நலம் விசாரித்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.