சுதந்திர தின நிகழ்ச்சிகளைக் காண நேரில் யாரும் வர வேண்டாம் – தமிழக அரசு!
கொரோனா பாதிப்பின் காரணமாக சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
இந்திய சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் காலை 9 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும் பொதுமக்களும் மாணவர்களும் பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பார்கள்.
கொரோனோ தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வயதை கருத்தில் கொண்டும் கொரோனா பாதிப்பினை தவிர்க்கும் விதமாகவுக்கும் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவை காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுதந்திர தின நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்து மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
