தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு - உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!
பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ் மணிவண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரன்பால், பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஜாமீன் கோரி அருளானந்தம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் விசாரணையை விரைந்து முடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க சிபிஐக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தது. அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் எனவும் கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.