கடினமாக உழைத்து நம் நாட்டை பெருமைப்படுத்துவேன் - முதல்வருக்கு நன்றி தெரிவித்த வாள்வீச்சு வீராங்கனை!
வாள்வீச்சு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதனையடுத்து, அவர் ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கிறார்.
இதற்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். வாள்வீச்சு தொடர்பாக மேலும் சில பயிற்சிகள் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசிடம் ரூ. 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், வீராங்கனை பவானி தேவியின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நேற்று அவரது தாயாரிடம் வழங்கினார். இது குறித்து பவானி தேவி கூறுகையில், நிதியுதவி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றி.
இந்த நிதியுதவி பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் தனக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியான பவானி தேவி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா. நான் தொடர்ந்து கடினமாக உழைத்து நம் நாட்டை பெருமைப்படுத்துவேன்.@mkstalin @V_Senthilbalaji #TANGEDCO https://t.co/Lyv25GyM5T
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) June 20, 2021