PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு ஜாமீன் வழங்க சென்னை போக்ஸோ நீதிமன்றம் அனுமதி மறுத்திருக்கிறது. ஆன்லைன் வகுப்பின் போது, பள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக பேசியதாகவும், குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ராஜகோபாலன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முழுமையாக விசாரணை முடிவடையாததால் ஜாமீன் தரக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க முடியாது என மறுத்து ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.