வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் - தமிழக முதல்வர் உத்தரவு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -
மேட்டூர் அணை திறப்பது குறித்து நீர் பாசனத்துறை, வேளாண்மை துறை அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 61.43 டிஎம்சி தண்ணீர் உள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதால், காவரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து 12ஆம் தேதி தண்ணீர் திறக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் 65 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணிகளை மேற்கொள்ள வசதியாக விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றை போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்கும்படி வேளாண்மை துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.