தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் : வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதாவது -
மார்ச் மாதத்திலிருந்து வெயில் காலம் தொடங்கும். தொடர்ச்சியாக 2 மாத காலம் வெயில் சுட்டெரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி, 28-ம் தேதியுடன் முடிவடையும். அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
பருவமழை தொடங்க சற்று தாமதமானதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று தற்போது வீசத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இனி வரக்கூடிய 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கைத் தகவலில் கூறப்பட்டுள்ளது.