கருப்பு பூஞ்சையில் இருந்து தப்பிக்க இதுபோன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்!

tamilnadu
By Nandhini May 28, 2021 07:57 AM GMT
Report
Courtesy: fathima

ஓர் எச்சரிக்கை செய்தி நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு வருகிறது. மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை, கொரோனா தொற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அல்லது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகளை கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கிறது என்று தெரிவித்தனர்.

இந்த கருப்பு பூஞ்சை காற்று, தண்ணீர், ஈரமான இடங்கள் மூலமாக பரவுகிறது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை பாதிப்பில் இருந்து தப்பிக்க தூசி மற்றும் ஈரமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஜோத்பூரை சேர்ந்த தகவல் தொடர்பு அல்லாத நோய்கள் நடை முறைப்படுத்துதல், ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவன இயக்குனர் அருண் சர்மா கூறியதாவது:-

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவு 4 வாரங்கள் வரை இருக்கும். இந்த நேரத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக ஆபத்து உள்ளது.

எனவே ஈரப்பதமான மற்றும் தூசி நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களுக்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சில வாரங்களுக்கு செல்லக்கூடாது.

ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் 3 அடுக்கு கொண்ட முக கவசம் அணிய வேண்டும். கையுறைகள் அணிந்து கை, கால்களை முழுமையாக மறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியமான நபரின் நோய் எதிர்ப்பு சக்தி தொற்று நோயை ஏற்படுத்த அனுமதிக்காது.

ஆனால் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள நபருக்கு கடுமையான தொற்றை ஏற்படுத்திவிடும். மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஸ்டீராய்டு அல்லது பிற நோய் எதிர்ப்பு தடுப்புகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளின் அறிகுறிகளை சரிபார்க்க வேண்டும்.

கடுமையான அழற்சி ஏற்படும் சில நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகள் ஒரு சிறந்த சிகிச்சையாக இருந்தாலும் அவை எப்போதும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட வேண்டும். மிக விரைவாகவும், அதிகமாகவும், அதிக நேரமாகவும் வழங்கப்பட்டால் அவை 2-ம் நிலை பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்