உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அத்தியவசியமாக தேவைப்படுகிறது. தற்போது நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நிரந்தர தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் துவக்கப்படும்.
மேலும் மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படும்.
இதற்காக, தொழில் கூட்டு முயற்சியாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோவில், குறைந்த பட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வரும் 31ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகள் கேட்கப்பட்டு, நிறுவனங்களின் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, தடுப்பூசி உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்தி கட்டமைப்புகளை விரைவில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.