கொரோனா மரணங்களின் உண்மையான விவரங்களை வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு போராடி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு முழு ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், பாதிப்புகள் குறைந்த பாடில்லை.
மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர். இதனால், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது.
அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் பாதிப்பு குறைந்துள்ளது. பரிசோதனை போதுமான அளவில் நடத்தப்படவில்லை. ஊரடங்கு கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.
இறந்தவர்களின் உடல்களை தடுப்பு விதிகளைப் பின்பற்றி அகற்ற வேண்டும். கண்ணியத்துடன் தகனம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பது பற்றிய திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம். கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் உண்மையான விவரங்களை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.