அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றப்பட்டாலே அதிகார மட்டத்தில் மாற்றம் ஏற்படுவது இயல்பு தான்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்திருக்கிறார்.
கீழ்ப்பாக்கம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது -
1. மருத்துவக் கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மோகன் குமாரமங்கலம் மாற்றப்பட்டு, மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.