கொளத்தூர் தொகுதி மக்களுக்காக அதிரடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்!
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அதிகளவில் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து கொரோனா பேரிடரை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தமிழக அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் போக்குவரத்துக்கு தடையும், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதல்வர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமித்துள்ளார்.
இந்நிலையில்,திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வார்டு 69-ல் உள்ள திரு.வி.க.நகர் மண்டலம் 6-இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் தினமும் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறினார்.
இதை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்ற அவர், திமுக சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களையும் வழங்கினார்.