தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து - அடுத்த வாரம் அறிமுகம்!

tamilnadu
By Nandhini May 15, 2021 10:50 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. எனினும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்று வல்லுநர்கள் கூறியதால், அந்தத் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டுக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இம்மாத இறுதியில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்ற அழைக்கப்படும் மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்காக அனுமதியும் அளித்துள்ளது. டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து இம்மருந்தை உருவாக்கியுள்ளது. இது தடுப்பூசி போல் அல்லாமல் பவுடர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தண்ணீரில் கலக்கி குடித்தால் போதும் என்கிறார்கள். இரண்டு கட்ட பரிசோதனை மட்டுமே இம்மருந்து உட்படுத்தப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்குக் இந்த மருந்து கொடுத்து பார்த்ததில் பெரும்பாலானோர் வேகமாகக் குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை இனங்கண்டு அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. மேலும், புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுக்கிறது.

இது குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், “டிஆர்டிஓ அமைப்பு தயாரித்த பவுடர் வடிவ கொரோனா தடுப்பு மருந்து 2 டிஜி மருந்து அடுத்த வாரம் முறைப்படி அறிமுகமாகிறது. தண்ணீர் கலந்து குடிக்கும் இந்த பவுடர் வடிவ மருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் வெளியிடப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும்” என்று கூறினர். 

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து - அடுத்த வாரம் அறிமுகம்! | Tamilnadu