கொரோனா பாதிக்கப்பட்ட விசிக பொருளாளர் முகமது யூசுப் மரணம்: சீமான், டிடிவி தினகரன் இரங்கல்!

tamilnadu
By Nandhini May 15, 2021 07:01 AM GMT
Report

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசப் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முகமது யூசப் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசிக பொருளாளர் முகமது யூசப் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது.

அன்புச்சகோதரர் முகமது யூசுப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்ணன் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிக உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. முகமது யூசுப் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

இனிமையாகப் பழகி, எல்லோரிடமும் நட்பு பாராட்டக்கூடிய திரு. யூசுப் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், வி.சி.க தலைவர் அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும், அக்கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் திரு. முகமது யூசுப் அவர்கள் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.