மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா- பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிவேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 2ம் அலை ஆரம்பத்தில் பரவும் போது ஒரு நாளைக்கு 20 ஆயிரத்திற்கு மேல் இருந்த பாதிப்பு தற்போது ஒரு வாரத்துக்கு முன்னர் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனிடையே, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாள வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. மாநில அரசுகளுடன் மத்திய அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தது. அதன் படி, பல மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.
தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி டெல்லியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தடுப்பூசிப் போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.