எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென கொடுத்த அட்வைஸ்!
தன்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துக் கொடுப்பதைத் தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -
கொரோனா என்ற பெரும் தொற்று நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவக் அமைப்புகளின் மூலமாக நோய் தொற்றிலிருந்து மீளவும் முழு ஊரடங்கு காரணமாக தொற்று பரவாமல் தடுக்கவும் அரசு களப்பணி ஆற்றி வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளுக்கான கூடுதல் செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள கருணை உள்ளத்துடன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள். இதன் பொருட்டு என்னை சந்திக்கவும், வாழ்த்துக்களை தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து பொன்னாடைகள் ஆகியவற்றை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக இவற்றைத் தவிர்த்து புத்தகங்களை வழங்குங்கள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே பூங்கொத்துகள், பொன்னாடைகளை உறுதியாகத் தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன். மேலும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டங்களுக்கும் , சொந்த தொகுதிகளுக்கும் சென்று தடுப்புப் பணியில் ஈடுபட கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரும்போது வரவேற்பு வளைவுகள், பதாகைகளை வைப்பதைத் தடுக்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் கண்டிக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
கொரோனா காலத்தில் இது போன்ற வரவேற்புகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தொற்றுக் காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பில் மட்டுமே ஈடுபடுங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.