மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - ராமதாஸ்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
வன்னியர்களுக்காக இட ஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்துதல், பிற சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்றுத் தருதல் ஆகியவை தான் நமது இலக்குகள் ஆகும். இந்த இலக்குகளை நோக்கிய நமது சமூகநீதி பயணம் தொடரும்; வெற்றியும் நம் வசமாகும்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 11 உறுப்பினர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கின்றன.
இத்தனை ஆண்டுகள், இத்தனை பதவிகள் காலியாக இருந்தும் கூட கடந்த 8 ஆண்டுகளாக வன்னியர் சமூகத்திலிருந்து ஒரு உறுப்பினர் கூட இல்லை. வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கோரியும் கிடைக்கவில்லை. 10.50% வன்னியர் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு கூட அச்சமூக பிரதிநிதி இல்லை. வன்னியர்களுக்கு சமூகநீதி எவ்வாறு கிடைக்கும்? என்று நேற்று அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.
இந்நிலையில், இன்று வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.