பல வசதிகளுடன் அமைச்சர்களுக்காக நவீன வசதியுடன் தயாராகும் புதிய பங்களாக்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோகமாக வெற்றி பெற்றது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். அதே நாளில், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள்.
கொரோனா காலக்கட்டத்தில் இக்கட்டான சூழலில், அவர்கள் பதவியேற்றிருப்பதால் பதவியேற்ற அனைவரும் அதிரடியாக கொரோனா பரவல் தடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் நவீன வசதியுடன் பங்களாக்கள் தயாராகி வருகிறது. சபாநாயகர் பங்களா மட்டும் 1 ஏக்கர் நிலப்பரப்பிலும், அமைச்சர்கள் பங்களா 5,000 சதுர அடி நிலப்பரப்பிலும் கட்டப்பட்டுள்ளது. அதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை பொதுப்பணி துறை சீரமைத்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் காலி செய்ததும், புதிய அமைச்சர்கள் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 நாட்களுக்குள் காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அதே பங்களாவில் இருப்பார் என தகவல் தெரியவந்துள்ளது. மேலும், துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ்க்கு காலி செய்ய 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.