கடலூர் அருகே திடீரென ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து சிதறியது - 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!
கடலூர் அருகே திடீரென ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடலூர் அருகே சிப்காட் என்ற பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து முதற்கட்ட விசாரணையில், காலைப் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்ததும், பாய்லர் அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது. காயமடைந்தோரை மீட்கச் சென்ற சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் ஆலையிலிருந்து கரும்புகை வெளியாகிக் கொண்டிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.