ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய ஆயுதப்படை காவலர்! குவியும் பாராட்டுகள்
கோவையில் கொரோனா நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை ஆயுதப்படை காவலர் வழங்கியுள்ளார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் தனது பங்களிப்பை அளிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் பாபு என்பவர் தனது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.
இதனையடுத்து, இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினத்தை நேரில் சந்தித்து, தனது ஏப்ரல் மாத சம்பளத் தொகையான ரூ.34 ஆயிரத்து 474 அவர் வழங்கினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூட தன்னுடைய சம்பளத்தை பாபு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முழு சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய பாபுவை, மாவட்ட எஸ்.பி., செல்வரத்தினம் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.