கொரோனாவிலிருந்து விடுபட இதை கண்டிப்பாக செய்யுங்கள் : ஆளுநர் தமிழிசை அறிவுரை!
மக்கள் தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
மாநிலங்களுக்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்குவதில்லை என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரு மாநிலம் எவ்வளவு தடுப்பூசி பயன்படுத்துகின்றனர் என்பதை கணக்கில் கொண்டுதான் மாநிலத்திற்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆரம்ப காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்களிடையே தயக்கம் இருந்ததால் தடுப்பூசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தடுப்பூசி மற்ற மாநிலத்தை விட எண்ணிக்கையில் குறைவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் உண்மையே தவிர மற்ற இடத்தை விட தமிழகம் மற்றும் புதுச்சேரி குறைவாக கொடுக்கப்படுகின்றது என்பது உண்மை அல்ல.
மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.தடுப்பூசி செலுத்திக்கொள்வது,முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால்தான் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியும். pic.twitter.com/B4yzlkTCBD
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 11, 2021
ஒரு மாநிலத்தில் தடுப்பூசி பயன்பாடு எவ்வளவு இருக்கிறதோ தடுப்பூசியும் அப்படியே வழங்கப்படும். தடுப்பூசிகளை அதிக நாட்கள் சேமித்து வைக்க முடியாது. அதனால் மத்திய அரசு இந்த வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.