தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
கடந்த மே 2ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 7ம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, கொரோனா தடுப்புப் பணிகளில் அவரது அமைச்சரவைத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின், கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் வசதிகள், வழங்கப்படும் உணவு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார் தமிழக முதல்வர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இலவச உணவு சேவையை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஊரடங்கு நாட்களில் தனியார் அமைப்பு சார்பில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.